இலங்கையின் கொலைக்களம்… முதல்முறையாய் இந்திய மீடியாவில்!!
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் பிரிட்டனின் ‘சேனல் 4′ தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் இந்தியாவில் முதல் முறையாக நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது.
இன்றும் நாளையும் கூட இந்தப் படம் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் உயிருடன் இருந்து இந்த கோரத்தைப் பார்த்திருந்தார்களேயானால், இலங்கை என்றாலே வெறுத்துப் ஓடிப்போய் இருப்பார்கள்.
ஆங்கிலத்தில் Blood bath என்பார்களே… அந்த பதத்துக்கு மிகச் சரியான அர்த்தம் இந்தக் காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைப் போன்ற ஒரு வலி மிகுந்த போராட்டத்தின் முடிவை உலகம் இதுவரை பார்த்திருக்காது.
சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், தன் சொந்த செலவில் இந்த செய்திப் படத்தை காட்சிகளாகத் தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு முறையாவது இந்த கோரக் காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வற்றும்வரை இந்த பாவப்பட்ட இனத்துக்காக அழுது தீர்த்திருப்பார்கள்.
தமிழர்கள் அல்லாத எத்தனையோ லட்சம் வெளிநாட்டவர் சக மனிதர்கள் புல்டோசர்களில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்ட ரத்தச் சேற்றில் புரண்டு கிடந்த காட்சியைக் கண்டு கலங்கியிருப்பார்கள்.
உலகமே இப்படி தமிழனுக்காக தவித்துக் கிடந்தாலும், இந்திய மீடியா உலகம் மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி அமைதி காத்து வந்தது, போர் நடந்தபோதும் சரி, அதன் கொடுமைகள் அந்நிய முயற்சியில் வெளியான கட்டத்திலும் சரி.
ஆனால் நொய்டாவில் கழுதை செத்துக் கிடந்தால்கூட விடிய விடிய, தொண்டை வலிக்க நியூஸ் வாசித்து கூக்குரல் போடும் வட இந்திய ஆங்கில மீடியா இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனிதாபிமானத்தை உலகுக்குப் போதித்த புத்தனின் சொந்த நாட்டில்தான் இந்த நிலை.
ஆனால் அத்திப் பூத்ததுபோல, ஹெட்லைன்ஸ் டுடே டிவி மட்டும் இந்த டாக்குமென்டரியை சேனல் 4 நிறுவனத்திடமிருந்து வாங்கி நேற்று ஒளிபரப்பியது. அதேசமயம், இந்த டாக்குமென்டரிப் படம் குறித்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து செய்திகளையும் ஒளிபரப்பி வந்ததையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையில் நடந்தேறிய அந்த கோரமான இனப்படுகொலை குறித்த இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பார்த்த யாருமே நிச்சயம் நேற்று இரவு சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அவலம் அந்தக் காட்சிகளில்.
பெண்களை கொடூரமாக கற்பழித்த கதைகள், தமிழர்களை ஈ எறும்பு போல கருதி இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடுமை, இளைஞர்களையும், சிறுவர்களையும் கூட கொடூரமாக கொன்று குவித்த அவலம், மருத்துவமனைகளை குறி வைத்து குண்டு வீசி நடத்திய அட்டூழியம், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி, கண்களைக் கட்டி தலையில் சுட்டுக் கொன்ற அகோரம், இருக்கிற பீஸிலேயே இந்த பீஸ்தான் நல்லாருக்கு என்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணைப் பார்த்து சிங்கள காடையர்கள் பேசிய அசிங்கமான வசனங்கள் என கண்ணீருக்குப் பதில் கண்களில் ரத்தம் வரவழைக்கும் காட்சிகள் நிறைந்த டாக்குமென்டரி அது.
இன்றும் நாளையும் கூட இந்த டாக்குமென்டரியை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே. இன்று இரவு 11 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கும் இந்த டாக்குமென்டரியைக் காணலாம்.
இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தைத் தாண்டி இந்திய மக்கள் யாருக்குமே சரியாக புரியாத நிலையே இன்று வரை உள்ளது. போர் நடந்தபோதும் சரி, முடிந்தபோதும் சரி, அங்கு நடந்த படுகொலைகள் அநீதிகளும் இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு இதுவரை புரியவே இல்லை அல்லது சரியாக போய்ச் சேரவில்லை.
ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய டாக்குமென்டரியை இந்தியாவின் அத்தனை பகுதி மக்களும் பார்த்திருப்பார்கள். கண் முன் கண்ட காட்சிகளைப் பார்த்த பிறகாவது சிங்கள காடையர்களின் ஈனத்தனத்தை, இனவெறுப்பை, இலங்கையில் வாழும் தமிழர் எத்தனை பெரிய நரகத்தில் உழல்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஈழத் தமிழர்கள் மீதான குறைந்தபட்ச அனுதாபத்தை இந்தியர் மனதில் உருவாக்கவாவது ஹெட்லைன்ஸ் டுடேயின் இந்த ஒளிபரப்பு உதவியிருக்கிறதே என்ற சின்ன ஆறுதல்தான், இன்னமும் இதயத்து ரணம் ஆறாத ஒவ்வொரு தமிழனுக்கும்!
No comments:
Post a Comment